பிரதமர் மோடி வருகையொட்டி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு மசனகுடி பகுதியில் போலீசார் உச்சக்கட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு இரவு கர்நாடக மாநிலம் சென்றார். இந்த நிலையில் இன்று ஹெலிகாப்டர் மூலம் கர்நாடக மாநிலம் பந்திபூருக்கு வரும் பிரதமர் அங்கிருந்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சாலை மார்க்கமாக வருகை புரிந்து தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவளிப்பதை காண்கிறார்.
இதனையடுத்து ஆஸ்கர் விருது வென்ற “தி எலிபன்ட் விஷ்பரர்ஸ்” திரைப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி, ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார். தெப்பக்காடு யானைகள் முகாமில் நிகழ்ச்சிகள் முடிந்து சாலை மார்க்கமாக மசனகுடி பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தடையும் பிரதமர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கர்நாடக மாநிலம் செல்கிறார்.
பிரதமர் வருகையை ஒட்டி மசனகுடி சாலை மார்க்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் பிரதமரை காண அனுமதிக்கப்படும் கட்சியினர் பொதுமக்கள், வெடிகுண்டு பரிசோதனை செய்யும் தனி சிறப்பு குழுவினரின் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாலை மார்க்கமாக பிரதமர் செல்லும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பிரதமர் வந்து சென்ற பிறகு கடைகள் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.