கடந்த சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகத் தொடங்கியது. பெண் ஒருவர் ஆற்றின் மேல் நடந்து செல்வது போல் அந்த வீடியோவில் இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள தில்வாரா காட் பகுதியில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தண்ணீர் மேல் அந்த பெண் நடந்ததாக குறிப்பிட்டு வீடியோ வைரலானதால், அந்த பெண்ணை மக்கள் தெய்வமாக வழிபட தொடங்கிவிட்டனர்.
அந்த வீடியோவை பார்க்கும்போது வயதான பெண்மணி ஆற்றின் மீது நடந்து செல்கிறார். சோஷியல் மீடியா முழுவதும் இந்த வீடியோ ஆக்கிரமித்து, அந்த பெண்ணுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக பரப்பப்பட்டுள்ளது. அவரால் தண்ணீர் மீது நடந்து செல்ல முடியும், அவருக்கு பிரத்யேக சக்திகள் எல்லாம் இருப்பதாக சோஷியல் மீடியாவில் கதைகள் பறந்தன. இதனைத் தொடர்ந்து அந்த வயதான பெண்ணை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் படையெடுக்க தொடங்கினர். அந்த பெண் அருகில் சென்று அவரின் கால்களை தொட்டும் வணங்க தொடங்கினர். இது அப்பகுதி காவல்துறையினர் காதுகளுக்கும் எட்டியது. உடனடியாக யார் அவர்? உண்மை என்ன? என்ற விசாரணையில் இறங்கினர்.
அப்போது, அந்த பெண்ணிடம் காவல்துறை விசாரித்ததற்கு நான் கடவுளின் அவதாரம் எல்லாம் இல்லை என தெரிவித்திருக்கிறார். நர்மா ஆற்றை கடப்பதற்கு தண்ணீர் குறைவான இடத்தை தேடிச் சென்று, ஓரிடத்தில் தண்ணீர் கால் அளவுக்கு குறைவாக செல்வதை பார்த்து அந்த இடத்தில் தண்ணீரில் இறங்கி நடந்து ஆற்றை கடந்திருக்கிறார். ஆனால், இதனை வீடியோ எடுத்து புரளியை கிளப்பியிருக்கின்றனர். கடவுளின் அவதாரம் என்றெல்லாம் இஷ்டத்துக்கு கதை அடித்து, அந்த பெண்ணை தெய்வத்தின் வடிவமாக சமூகவலைதளங்களில் மாற்றிவிட்டனர்.
உண்மையென நம்பிய சிலர் அந்த பெண்ணின் காலில் விழுந்து ஆசி வழங்குமாறு கெஞ்சிக் கூத்தாடியிருக்கின்றனர். இது குறித்து காவல்துறை தெரிவிக்கும்போது, அந்த பெண்ணின் பெயர் பாய் ரகுவன்ஷி (51) என தெரிவித்துள்ளனர். அவர் வீட்டில் இருந்து காணாமல் போனதாக காவல்துறையில் புகார் பதிவாகியிருப்பதும், மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர். உண்மையை அறிந்த சிலர், தங்களின் தலையில் அடித்துக் கொண்டு திரும்பியிருக்கின்றனர்.