ஈரானிலும், சவுதி அரேபியாவிலும் பரஸ்பரம் துாதரங்களை திறக்க இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட 47 பேருக்கு 2016ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா முஸ்லிம் பிரிவினரை கோபம் அடைய செய்தது. குறிப்பாக ஷியா பிரிவினர் அதிகம் வாழும் மேற்காசிய நாடான ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது, இரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டது. இது தொடர்பாக நடந்த முயற்சியில் இரு நாடுகளும் சமாதானம் அடைந்தன. இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் ஆகியோர், சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, மோதல் காரணமாக இரு நாடுகளிலும் மூடப்பட்ட துாதரகங்களை திறக்க இரு நாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு வரும் தடைகளை அகற்ற இரு தரப்பினரும் தயார் நிலையில் இருப்போம். பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதால் ரியாத்திலும், டெஹ்ரானிலும் மூடப்பட்ட தூதரகங்கள் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.