10 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய ஸ்வர்ணலதா, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். இளமையிலிருந்து பாடல் மீதும் இசை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தந்தையும் இசைக்கலைஞர் என்பதால் அவருக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் ஸ்வர்ணலதா என்று பெயரிட்டனர்.
பள்ளிகாலம் கேரளாவிலும் பின்னர் கர்நாடகாவிலும் அவருக்கு இருந்தது. மூன்று வயதிலிருந்து பாட ஆரம்பித்த ஸ்வர்ணலதா, தன் படிப்பை முடித்துக் கொண்டு 1986 ஆம் ஆண்டு பொழுதில் சென்னையில் குடியேறினார். திரைத் துறையில் அவருக்கான முதல் வாய்ப்பை கொடுத்தவர் இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன். நீதிக்கு தண்டனை என்ற படத்தில் சின்னஞ்சிறு கிளியே என்ற பாடல் மூலம் தமிழ் திரை உலகில் 16 வயதில் அறிமுகமானார். முதல் பாடலிலேயே பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் உடன் பாடும் அனுபவம் அவருக்கு கிடைத்தது.
அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் செல்வமாக குவியத் தொடங்கியது. இளையராஜா கோலோச்சிய எண்பதுகளின் இறுதியில் திரைத்துறைக்கு வந்தாலும், அவருடைய இசையமைப்பில் பல்வேறு படங்களுக்கு பல்வேறு நடிகைகளுக்கு பின்னணி குரலாக இருந்து பாடலை பாடி கொடுத்திருக்கிறார் ஸ்வர்ணலதா. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், மணிசர்மா, தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ், ஜெயராஜ், வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் சுவர்ணலதாவுக்கு வாய்ப்பை கொடுக்க அதைக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.
90களின் ஆரம்ப காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் கலக்கிய சின்னத்தம்பி படத்தின் “போவோமா ஊர் கோலம்” என்ற பாடல் இன்று வரை இசை ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்திருக்கிறது. மெல்லிசை குரலில் இருந்து, விஜயகாந்த் நடிப்பில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆடும், ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாடல் அவர் குரலில் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முக்கிய காரணமாக அமைந்தது. அதன் பின்னர் ராக்கம்மா கையத்தட்டு, குயில் பாட்டு என்ற பாடல்கள் இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாடல்கள்.