அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பே ஏரியா பகுதியில் வசித்து வருபவர் சுனில் தார் (வயது 65). தனது இளைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளார்.
இதற்காக டெல்லியை சேர்ந்த மணமகளை பேசி முடித்து உள்ளார். திருமணம் அமெரிக்காவில் நடத்த முடிவானது. எனினும், திருமணத்தில் மணமகளின் பெற்றோர் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் சுனில் கூறும்போது, திருமண நிகழ்வு என்பது ஒருவரது வாழ்நாள் முழுவதும் நினைவில் நிறைந்திருக்கும். இந்த சூழலில், பெற்றோர் பங்கேற்காமல், என்னுடைய வருங்கால மருமகள் திருமணம் செய்து கொள்வதற்கு நான் விரும்பவில்லை.
ஆனால், அமெரிக்காவுக்கு வருவதற்கான விசா நடைமுறைகளுக்கு அவர்களுக்கு அரசு அனுமதி கிடைக்கப்பெறவில்லை என கூறியுள்ளார். இந்தியர்களுக்கு, அமெரிக்காவில் விருந்தினர் விசா கிடைப்பதற்கு சில சமயங்களில் ஓராண்டுக்கும் மேலாக கூட காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இந்த சிக்கலான தருணத்தில், இரு வீட்டாரும் ஒரு சுமுக முடிவை எடுத்தனர். இதன்படி, சான்பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் மணமகன் வீட்டார், வாஷிங்டன் நகரில் உள்ள பிளெய்ன் நகர பகுதியில் திருமணம் நடத்துவது என முடிவு செய்தனர்.
பீஸ் ஆர்ச் பகுதிக்கு அடுத்து அமைந்த அமெரிக்கா மற்றும் கனடா எல்லையையொட்டிய நிலப்பகுதி ஆகும். இதில் பூங்கா ஒன்றும் அமைந்து உள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் கனடா நாட்டினர் குடியுரிமை இன்றி உரையாடி கொள்ளும் வகையிலான பொதுவான ஓர் இடம் ஆகும்.
இந்த பூங்காவின் தென் பகுதியில் மணமக்களின் திருமணம் நடைபெற உள்ளது. மணமகளின் பெற்றோர் மற்றும் பிற குடும்பத்தினர் கனடா விசா வைத்து உள்ளனர். அதனால், அவர்கள் கனடா வழியே அந்த பகுதிக்குள் வந்தனர். இதனால், அமெரிக்க விசா இன்றியே, அமெரிக்க தரப்பில் உள்ள அந்த பகுதிக்கு பயணித்து, தங்களது மகளின் திருமண நிகழ்ச்சியிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.