சீனாவில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பொருளாதார நிலை சற்று மந்தநிலையில் காணப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகச் சீனா பின்பற்றிய ஜீரோ கோவிட் பாலிசி மூலம் தொற்று பாதிக்கப்பட்ட இடங்கள் முழுமையான ஊரங்குப்படுத்தப்பட்டது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி அந்நாட்டில் பட்டதாரிகளை விட முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வேலை கிடைக்காத காரணத்தால், அந்நாட்டு இளைஞர்கள் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, மனதை அமைதிப்படுத்தவும், நல்ல வேலை கிடைக்கவும் சீன இளைஞர்கள் வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவு குவிந்து வருகின்றனர்.
கோவிலுக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட தற்போது 310 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகச் சுற்றுலா நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.