திருநங்கையர் நல வாரியத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன அதன் மூலம் திருநங்கையர்களுக்கு கிடைப்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
சமூகநல மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு அரசின் மக்கள் சாசனம் கொள்கை குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சமூகநலத்துறை மானிய கோரிக்கையில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் என்னென்ன என்பது இந்த கொள்கை குறிப்பில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
திருநங்கைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம் சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் 11 அலுவல்சார் உறுப்பினர்களும், 12 திருநங்கையர்கள் மற்றும் ஒரு பெண் கொண்ட 13 அலுவல்சாரா உறுப்பினர்களையும் கொண்ட நலவாரியம். இதே போல திருநங்கையர்களை கண்டறிய மாவட்ட அளவிலான குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்று அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 4 அழுவல்சாரா உறுப்பினர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது.
திருநங்கைகளுக்கு வழங்கப்படும் உதவிகளும், தகுதியும் … ! ?
திருநங்கையாக இருப்பவர்களுக்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உணவுப் பொருள் வழங்கும் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டாக்கள், மருத்துவ வசதிகள், இலவச வீட்டு வசதி, கல்வி உதவித்தொகை, திறன் வளர்க்கும் பயிற்சிகள், சுய உதவிக் குழுக்களில் ஆதரவளித்தல், பொருளாதார செயல்பாட்டிற்கான ஆதரவளித்தல், குறுகிய காலம் தங்கும் இல்லங்கள் ஆகியவை திருநங்கைகளுக்கு உதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவிகள் பெற அந்த திருநங்கை, தமிழ்நாடு திருநங்கை நல வாரியத்தில் பதிவு செய்து அதற்கான அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டை சமூக நலத்துறை கடைபிடித்து வருகிறது.
ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்…!
ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடல் ரீதியாக உழைத்து சம்பாதிக்க இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழை திருநங்கைகளுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, 1,000 ரூபாயாக வழங்கி வந்த ஓய்வூதியம் தற்போது 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெறும் திருநங்கையர்கள் 40 வயதிற்கு மேற்பட்ட ஏழை திருநங்கைகளாக இருக்க வேண்டும். திருநங்கை நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்த வேண்டும் என்றும் உடல் ரீதியாக உழைத்து சம்பாதிக்க இயலாத திருநங்கையாக இருந்திருக்க வேண்டும். அதே போல குடும்ப உறுப்பினர்களோ அல்லது வேறு எந்த நபர்களாலும் உதவி பெறாத திருநங்கையராக அவர் இருக்க வேண்டும் என்று இந்த விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளது. தங்களுக்கான உதவிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலர் அணுகி இந்த திட்டத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கையர்கள் அதுவும் ஆதரவற்ற திருநங்கைகள் இணைந்து கொள்ளலாம்.