பிரதமர் மோடி பங்கேற்கும் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் ஏற்பாடுகளை செய்திருந்தது.
இந்த 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியானது ஐ.நா. சபையின் தலைமையகத்திலும் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அவர் இந்தியில் ஆற்றிய உரையானது, 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பானது
இங்கிலாந்தில் லண்டன் நகரில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நடத்த இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்து உள்ளனர். இதில், மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் கலந்து கொண்டார். இதேபோன்று, அமெரிக்காவிலும் நியூஜெர்சியில் பிரமாண்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டதுடன், 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க அமெரிக்காவின் நியூஜெர்சியில் இந்திய வம்சாவளி மற்றும் நண்பர்களுடன் இணைந்துள்ளேன் என தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை இந்திய வம்சாவளி மக்கள் திரண்டிருந்து கேட்டனர். அவர்களில் ராம்பென் என்ற 100 வயது மூதாட்டியும் ஒருவர். அவர் இந்தியர்களுடன் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டார்.
நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பேனரில் பிரதமர் மோடியின் உருவம் இடம் பெற்று இருந்தது. அதனை பார்த்து அவர், தொட்டு பிரதமர் மோடியை வாழ்த்தினார். பின்னர் கையெடுத்து கும்பிட்டார். இதன்பின்னர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.