சிலரால் தாக்கப்பட்டதில் சுமார் 5 மாதங்களாக சுயநினைவின்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காதல் தொடர்பை அடிப்படையாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹகுரன்கெத பல்லே போவல, பம்பரகம கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இந்துனில் சாமர காரியப்பெரும என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இவர் கொரிய மொழி பாடத்தை பயில சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்தார்.
இந்நிலையில், கொரிய மொழி பாடத்தின் வட்ஸ் எப் குழுவில் இணைந்த இந்துனில், அங்கிருந்த பெண் ஒருவருடன் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் குரல்பதிவுகளை பரிமாறிக்கொண்டார்.
ஆனால் இந்துனில் உண்மையில் 44 வயது பெண் ஒருவருடன் வட்ஸ்எப் மூலம் தொடர்பில் இருந்தது அவருக்குத் தெரியாது என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
இருவருக்குமிடையிலான உறவை அறிந்த பெண்ணின் உறவினர்கள் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி கொழும்பு கோட்டையில் கொரிய மொழி இறுதிப் பரீட்சைக்கு சென்ற இந்துனிலை கடத்திச் சென்றுள்ளனர்.
காரில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட இந்துனில் சப்புகஸ்கந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இறுதியில், கொலன்னாவ மயானத்திற்கு அருகில் வந்த குழுவினர் காரில் இருந்து இறங்கி, இந்துனிலின் ஆடைகளை கழற்றி மீண்டும் ஒருமுறை அவரை தாக்கிய விதம் அடங்கிய காணொளி ஒன்று கிடைத்துள்ளது.
பின்னர், தாக்குதல் நடத்திய கும்பல் அந்த இளைஞனை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது.
பிரதேசவாசிகளால் ஆபத்தான நிலையில் இருந்த இந்துனில் ஏப்ரல் 19ஆம் திகதி சபுகஸ்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், படுகாயமடைந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இந்துனில் கடந்த 12ம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார்.