அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஜசிண்டோ நகரை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டு இருந்தார். இதனால் அவரின் அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.
அந்த வீட்டில் இருந்த நபர்கள் சிலர் வெளியே வந்து, துப்பாக்கியால் சுட்டு கொண்டு இருந்த அந்த நபரிடம் அதை நிறுத்தும்படி கூறினர். அதற்கு அந்த நபர் “இது, என் வீடு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். என்னை நிறுத்த சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை” என கோபத்துடன் கூறினார்.
அவர்கள் அந்த நபரை திட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டனர். பின்னர் அந்த நபர் துப்பாக்கியுடன் அண்டை வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். வீட்டினுள் இருந்த ஒரு பெண் வந்து கதவை திறந்தார்.
அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய அந்த நபர், வீட்டுக்குள் சென்று கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுவடுதுபோல சுட்டு தள்ளினார். இதில் 3 பெண்கள், 8 வயது சிறுவன் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.
அதன் பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.