டெல்லி விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் மூன்று குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி விமான நிலையம் நேற்று காலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அப்போது பல விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன.
விமான ஊழியர்களும், பயணிகளும் சோதனைகளை முடித்துக் கொண்டு தங்களது விமானங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு காலை 7.30 மணியளவில் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், ”42-ம் எண் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யுகே971 என்ற எண் கொண்ட விமானத்தில் 3 குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் ஒரு மணி நேரத்தில் வெடிக்கும்” என்று கூறிவிட்டு, அழைப்பை துண்டித்தார்.
இதையடுத்து, விமான நிலையம் பரபரப்படைந்தது. அந்த குறிப்பிட்ட இடத்தில், விஸ்தாரா என்ற தனியார் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த விமானம், காலை 8.30 மணிக்கு மராட்டிய மாநிலம் புனே செல்வதற்கு தயாராக இருந்தது.
விமானத்தில் பயணிகளும், ஊழியர்களும் ஏறி அமர்ந்திருந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள தகவலை அவர்களுக்கு தெரிவித்து பயணிகளும், ஊழியர்களும் கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அனைவரும் கீழே இறங்கினர். விமானம் தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விமானத்தில் வெடிகுண்டு உள்ளதா என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது சோதனையில் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் சிக்கவில்லை.
எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.