நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அளவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தெதுருஓயா, தப்போவ, வெஹேரலகல, லுணுகம்வேஹேர, மவ்ஆர மற்றும் உடவலவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவில் பெய்த கடும் மழையினால், கெசெல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததில் பொகவந்தலாவின் தாழ்நிலப் பகுதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.