இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதியின் கொள்கை மாறுபட்ட வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்ப்பார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கின்றார்கள்.
வடகிழக்கு மக்களுக்கும் சரி, மலையக மக்களுக்கும் சரி இந்த சூழ்நிலையில் அவரது உரையானது, சற்று சந்தேகத்தை எழுப்புகின்ற ஒரு சூழ்நிலையாக இருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக ஏற்படுத்தப்பட்ட பிரேரணையை அவர் எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.
அந்த வகையில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வதற்கு அவர் ஒரு சாதகமான பதிலைச் சொல்லவில்லை.
அதே போன்று யுத்தக் குற்றம் செய்தவர்களை நாங்கள் கைது செய்ய மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு நீதிபதிகளை வைத்தே பரிசீலனை செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இது ஒட்டு மொத்தமாக ஒரு இனப்பிரச்சினையை அல்லது தமிழர்களுக்கெதிரான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கான ஒரு சூழ்நிலையே.
அதே போன்று சிங்கள மக்கள் இந்த பிரச்சினைகள் தீர்ந்து ஒரு சுமுகமான நாடாக, சுமுகமாக வேலை செய்ய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.
ஜனாதிபதியின் கொள்கை ஏட்டிக்குப் போட்டியாக இருக்கின்றதென்பது தெட்டத் தெளிவாக இருப்பதாக, வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.