இணையச் சேவை வழங்குவதில் பாகிஸ்தான் மிக மோசமான நிலையில் உள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் இன்னும் பின்னோக்கிதான் தான் இருக்கிறது. இணையச் சேவை வழங்கும் தரம் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்யும் ஒரு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மிக மோசமான மற்றும் வேகம் குறைந்த இணையச் சேவை வழங்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்டர்நெட் சேவையை முழுமையாகவும், வேகமாகவும் வழங்குவதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அங்கு இணையச் சேவையைப் பயன்படுத்துவோர் மிகவும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், மோசமான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளால் பாகிஸ்தானின் 15 விழுக்காடு மக்களுக்கு இணையச் சேவை கிடைக்க வாய்ப்பே இல்லை என்று தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் விரைவான மற்றும் தரமான இணையச் சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பலரும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முறையான அரசு ஒத்துழைப்பு கிடைக்காததால் இதுவும் சாத்தியமில்லாமல் போயிருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்த நிலையை சீராக்கப் பாகிஸ்தான் இப்போதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மிக மிக மோசமானதாக மாறும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை பாகிஸ்தானின் இணையச் சேவை ஓரளவிற்கு நல்ல நிலையில் இருந்தது. 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட வெள்ளம் அந்நாட்டின் உட்கட்டமைப்பைச் சேதப்படுத்தியுள்ளது. இதில் நாட்டின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
அதைச் சீரமைக்க அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்ப சேவையும் இணையச் சேவையும் இந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் பெரும்பாலான நாடுகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையச் சேவையில் தன்னிறைவு பெற்ற நாடுகளாகத் திகழ்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் இணையச் சேவை என்பது இன்னும் பேச்சுப் பொருளாகவே இருந்து வருகிறது. பாகிஸ்தானில் நிலவு அரசியல் சூழல், பொருளாதார தட்டுப்பாடு போன்றவற்றினால் மேலும் இந்நிலை மோசம் அடைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.