நானுஓயா பகுதியில், 16 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானுஓயா பகுதியைச் சேர்ந்த நபர், குறித்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரேயோகம் செய்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 52 வயதுடைய சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும், அதனை செலுத்தாத பட்சத்தில், மேலும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுதவிர, வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்திற்கு 15,000 ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி குறித்த தொகையினை செலுத்தாத பட்சத்தில், மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.