வாழப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் கொடியேற்று நிகழ்ச்சி முடித்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு, பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
அப்போது, திடீரென அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி மேடை பின்பகுதியில் சாய்ந்தது. இதை அறிந்து கொண்ட மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள், மேடையில் இருந்து குதித்து தப்பினர். சிலர் மேடையில் விழுந்தனர். இருப்பினும் இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் இன்றி தப்பினர். இதன் பின்னர் அன்புமணி பேசிவிட்டு சென்றார்.
இதையடுத்து சிறிய மேடையில் 20க்கும் மேற்பட்டோர் ஏறி நின்றதால் மேடை சாய்ந்து இருக்கலாம் அல்லது அமைக்கப்பட்ட மேடை உறுதியாக இல்லாமல் இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் நிகழ்ச்சி மேடை சாய்ந்தது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நிகழ்ச்சி மேடை சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.