ஓமானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மட்டக்களப்பில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமானில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, இரண்டு பேரிடம் இருந்து 9 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதியினை சந்தேகநபர், பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த இரண்டு நபர்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளும், மட்டக்களப்பு காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, அவர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைதானவர் மட்டக்களப்பு அமிர்தகழி பகுதியைச் சேர்ந்தவராவார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர், இன்று மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ஆராய்ந்த நீதிவான் அவரை, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.