ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 135 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஹேரி ப்ரூக் மற்றும அபிஷேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர்.
13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்து வெளியேறினார். 26 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 21 ரன்னில் வெளியேற, கேப்டன் எய்டன் மார்க்ரம் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
கடந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ஹெய்ரிக் கிளாசன் 17 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மயங்க் அகர்வால் 2 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விகெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி தரப்பில் ரவிந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.ஆகாஷ் சிங், மஹீஷ் தீக்சரா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தொடக்கத்தில் ஐதராபாத் அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ரன்குவிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே, இந்த மேட்ச்சை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் நேரில் கண்டு மகிழ்ந்தார்.