பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜீவன சக்தி என்ற பிரத்தியேக காப்புறுதி திட்டம் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பன இணைந்து இந்த காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
பெருந்தோட்டதுறையில் தொழில்நேரத்தில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் மரணங்களை கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்கருதி இந்த காப்புறுதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும், அவர்களின் துணை மற்றும் இரு பிள்ளைகளை இந்த காப்பீடு செய்யமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் மற்றும் குளவிக்கொட்டு உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் தொழிலாளர்களுக்கும் இந்த காப்புறுதி ஊடாக நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்புறுதி திட்டத்துக்காக தொழிலாளர் ஒருவர் மாதம் 99 ரூபா செலுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமன்றி பெருந்தோட்டத்தில் வசிப்பவர்கள் மற்றும் பெருந்தோட்ட உத்தியோகத்தர்களும் இந்த காப்புறுதி திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.