16ஆவது சீசனின் இன்றைய போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில், சீரான வேகத்தில் விக்கெட்டுகள் விழுந்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அணியில் வேறு யாரும் 25 ரன்கள் கூட எட்டவில்லை. இன்னிங்ஸின் இறுதியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது.
இதனால் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஆரம்பமே முதலே அதிரடி காட்டினார் இளம் வீரர் ஜெய்ஸ்வால். பட்லர் ஒரு முனையில் ரன் அவுட் ஆக, ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டினர்.
ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 13.1 ஓவரில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 5 சிக்சர்கள் 12 பவுண்டரிகள் என ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என சஞ்சு சாம்சன் களத்தில் நின்றார்.
150 ரன்கள் என எளிய இலக்காக இருந்தாலும், 98 ரன்கள் எடுத்து, நூலிழையில் தனது சதத்தை தவறவிட்டார் ஜெய்ஸ்வால். இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.