நெல்லையில் பஞ்சாயத்து உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 32). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. ராஜாமணி கீழந்த்தம் பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில், ராஜாமணி இன்று வழக்கம்போல் வீட்டில் உள்ள ஆடுகளை அருகில் உள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர், மாலை ஆடுகளை வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் ராஜாமணியை இடைமறித்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜாமணி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ராஜாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.