மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வீதிகளில் பனிமூட்டமான வானிலை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக வாகனச் சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துவதுடன் பனிமூட்டம் அதிகரித்து காணப்படும் பகுதிகளில் மூடுபனி விளக்குகளை ஒளிரவிடுமாறு அறிவுறுத்தப்பட்டள்ளது.
கொழும்பு நுவரெலியா வீதி, பலாங்கொடை பண்டாரவளை வீதி, பலாங்கொடை பொகவந்தலாவ வீதி மற்றும் பலாங்கொடை பதுளை வீதி ஆகிய வீதிகளிலும் இந்த நிலை காணப்படுகின்றமையினால் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிவும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.