ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் அணி நுழைந்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
சாஹா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்து சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து சாய் சுதர்சன் ஆட்டமிழக்க 58 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 13 பவுண்டரியுடன் 101 ரன்கள் எடுத்தார் சுப்மன் கில். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்னிலும், அபிசேக் சர்மா4 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் 10 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய விக்கெட் கீப்பர் ஹெய்ன்ரிக் கிளாசன் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணியால் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 13 போட்டிகளில் 9 இல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.