அந்தியூர் பர்கூர் மலையில், 13 குழந்தைகளை பெற்ற கூலித் தொழிலாளியிடம், மருத்துவக் குழுவினர் கெஞ்சிக் கூத்தாடி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் மலை, ஒன்னகரையைச் சேர்ந்தவர் சின்ன மாதையன், 46, விவசாயக் கூலி. இவரது மனைவி சாந்தி, 45. இவர்களுக்கு ஏற்கனவே ஐந்து பெண், ஏழு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
முதல் குழந்தையான ஆணுக்கு, 25 வயதாகிறது. மீண் டும் கர்ப்பமான சாந்திக்கு, நான்கு நாட்களுக்கு முன், 13வது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்ய முடியாததால், கணவர் மாதையனை நவீன கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
அவர் தயங்கியதால், அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள், அந்த தம்பதி வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர்.
ஆப்பரேஷன் செய்ய மறுத்து அடம்பிடித்த சின்ன மாதையனுக்கு, அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து, நீண்ட நேரம் அறிவுரை கூறினர்.
தொடர்ந்து குழந்தைகள் பெற்றால், மனைவிக்கு ஏற்படும் பக்க விளைவுகளை அதிகாரிகள் விளக்கவே, ரொம்ப கஷ்டப்பட்டு, குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்து கொள்ள சின்ன மாதையன் சம்மதித்தார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை மருத்துவக் குழுவினர், சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தனர்.
தொடர்ந்து, அந்தியூர் அரசு மருத்துவ மனையில் சின்ன மாதையனுக்கு, நேற்று முன்தினம் நவீன கருத்தடை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
அரசின் ஊக்கத்தொகை வழங்கி, அவரை அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பி வைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.