வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. அதில் கடைசியாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்கும் வேலையை துவங்கியுள்ள பிசிசிஐ நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் அசத்திய யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற வீரர்களை முதல் முறையாக தேர்ந்தெடுத்து வாய்ப்பு கொடுத்துள்ளது.
இருப்பினும் அந்த அணியில் கொல்கத்தாவுக்கு மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் பினிஷராகவும் செயல்பட்ட ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அதே போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜித்தேஷ் சர்மாவும் தேர்ந்தெடுக்கப்படாதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தினால் குறைவான பந்துகளை எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். இதில் ஜித்தேஷ் சர்மா ரிஷப் பண்ட்க்கு பதிலான மாற்று வீரராக செயல்படுவதற்கு தகுதியானவர் என்று கெவின் பீட்டர்சன், வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வானதால் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இருப்பினும் இதற்காக வருத்தப்படவில்லை என்று தெரிவிக்கும் ஜிதேஷ் சர்மா கடவுள் தமக்கு விரைவில் இதை விட சிறந்த வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது,
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் கடவுள் எனக்கு இதை விட பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். கடந்த நியூசிலாந்து தொடரில் தேர்வான போது இந்திய அணியினர் என்னை வரவேற்றனர்.