பிரேசில் நாட்டில் 73,000 மக்கள் வசிக்கும் நகரம் ஒன்று மொத்தமாக பூமிக்குள் புதையும் அபாய கட்டத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள Buriticupu என்ற நகரம் கடுமையான காடழிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி நகரைச் சுற்றி 70 மீற்றர் அளவுக்கு ஆழம் கொண்ட பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளது.
அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்குள் நிலச்சரிவுகள் ஏற்பட்டு நகரத்தை மொத்தமாக அழித்துவிடும் அபாயம் உள்ளது. தற்போது 26 பள்ளங்கள் அப்பகுதியில் உள்ளன, ஒவ்வொன்றும் 298 மீற்றர் நீளம் இருக்கும் என்றே கூறுகின்றனர்.
நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆண்டுகளாக காடுகளை அழிப்பதன் மூலம் இந்த பள்ளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு, கடுமையான மழைப்பொழிவு நிலைமையை மேலும் பேரழிவுக்கு வழிவகுத்துள்ளது, அதிகாரிகள் பொது பேரிடர் நிலையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர்.
1994ல் இந்த நகரம் நிறுவப்பட்டதிலிருந்து, உரிய திட்டமிடல் இல்லாததால், அடிப்படைப் பிரச்சினை மோசமடைய காரணமாக அமைந்தது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
தற்போது, அங்குள்ள நிலைமையை கண்காணித்து, அப்பகுதி மக்களை வேறு பகுதிக்கு குடியமர்த்தும் பணிகளை சில சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், மூன்று தெருக்களையும், 50க்கும் மேற்பட்ட வீடுகளையும் ஒரே ஒரு பள்ளம் விழுங்கியுள்ளது.
மட்டுமின்றி, கடந்த 20 ஆண்டுகளில் இந்த பள்ளங்களில் விழுந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 20 ஆண்டுகளில் Buriticupu நகரப்பகுதியில் 41% காடழிப்பு நடந்துள்ளது.
தற்போது தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி, வேறு பகுதிக்கு செல்ல தயாராகும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 109,505 பவுண்டுகள் உதவித்தொகையாக அறிவித்துள்ளது.