கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் குற்றச்சாட்டில் இருந்து அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் தனுஷ்க குணதிலக்க இன்றைய தினம் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பரிசீலனை மேற்கொள்ளப்படுவதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
சிட்னியில் டிண்டர் சமூக ஊடக செயலி மூலம் தொடர்பு ஏற்பட்ட பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றபோது, குறித்த குற்றச்சாட்டில் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், குறித்த வழக்கிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தனுஷ்க குணதிலக்க, “எனது வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அதனால் நான் திரும்பிச் சென்று கிரிக்கெட் விளையாட காத்திருக்கிறேன் என்று கூறினார்.
இந்தநிலையில், தனுஷ்க குணதிலக்கவுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளித்து, விளையாடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கட் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.