தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ்ஸொன்றின் மீது கொள்கலன் லொறி மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (26) இரவு 10.00 மணியளவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களுத்துறை வடக்கு, பெல்பொல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பை நோக்கி பயணித்த பஸ் ஒன்று கொள்கலன் லொறியை முந்திச்செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்று உடனடியாக களனிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் கொள்கலன் லொறியின் சாரதியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.