ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற 208 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து குஜராத் அணியின் பேட்ஸ் மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் ரிதிமன் சாஹா அர்ஜுன் டெண்டுல்கர் வேகத்தில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், விஜய் சங்கர் 19 ரன்னும் எடுத்தனர்.
பொறுப்புடன் விளையாடிய தொடக்க வீரர் சுப்மன் கில் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாட்டியா அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
22 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் மில்லர் 46ரன்களும், 21 பந்தில் அபினவ் மனோகர் 42 ரன்களும், 5 பந்துகளில் 3 சிக்சர்களுடன் ராகுல் தெவாட்டியா 20 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 207 ரன்களை எடுத்துள்ளது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
2 ஓவர்களை வீசிய கேமரூன் க்ரீன் எதிரணிக்கு 39 ரன்களை வாரி வழங்கினார். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.