ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
ரோடுகள் அனைத்தும் ஆறாக மாறி இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரே நாள் இரவில் 200 மில்லிமீற்றர் மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சீனாவின் குவாங்டாங் கடற்கரையில் பலத்த மழை பெய்தது.
ஹாங்காங்கில் மழையால் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல மெட்ரோ ரயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணி இடம்பெற்று வருகின்றது.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
ஊழியர்கள் வீட்டில் இருந்த படி பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 140 ஆண்டுகளுக்கு பிறகு ஹாங்காங்கில் இடைவிடாமல் கனமழை பெய்துள்ளது.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.