ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 7 ரன் வித்தியாசத்தில்வென்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக வார்னரும், பிலிப் சால்ட்டும் களத்தில் இறங்கினர். சால்ட் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஸ்வர் வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து இணைந்த வார்னர் – மிட்செல் மார்ஷ் இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
மார்ஷ் 25 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வார்னர் 21 ரன்னில் வெளியேறினார். சர்ப்ராஸ் கான் 10 ரன்களும் அமன் ஹகிம் 4 ரன்களும் எடுத்தனர். 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 62 ரன்கள் எடுத்திருந்தபோது மனிஷ் பாண்டே – அக்சர் படேல் இணைந்து பொறுப்புடன் விளையாடினர்.
இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தலா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் ஹேரி ப்ரூக் 7 ரன்னில் வெளியேற மற்றொரு வீரர் மயங்க் அகர்வால் நிதானமாக விளையாடிய 49 ரன்கள் எடுத்தார். ராகுல் திரிபாதி 15, அபிசேக் சர்மா 5 கேப்டன் எய்டன் மார்க்ரம் 3 ரன்களை எடுத்தனர்.
கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் கிளாசனும், வாஷிங்டன் சுந்தரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கிளாசன் 19 பந்தில் 31 ரன்களும், சுந்தர் 15 பந்தில் 24 ரன்னும் எடுத்தனர். ஐதராபாத் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டபோது, டெல்லி அணியின் முகேஷ் குமார் அற்புதமாக பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.