தமிழ் சினிமாவின் சின்ன மனோரமா என அழைக்கப்படும் கோவை சரளா இன்று அவரது 61 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த தினத்தில் அவரது திரை வாழ்க்கை குறித்த ஒரு சுவாரசிய தொகுப்பை தற்பொழுது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் – பத்மினி, பிரபு – குஷ்பூ, சூர்யா – ஜோதிகா என திரையில் இணைந்து மின்னிய சில நட்சத்திர ஜோடிகளை மறக்க முடியாது. அந்த வகையில் வடிவேலு கோவை சரளா கூட்டணியையும் ரசிகர்களால் எளிதில் மறந்திர முடியாது.
மனோரமாவிற்கு பிறகு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பொருந்தி போகும் பெண்மணியாக தமிழ் சினிமாவில் ஏறத்தாழ நான்கு தசாப்தங்களைக் கடந்து நடித்து வருகிறார் கோவை சரளா.
தனது 17 வது வயதிலேயே தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்ட கோவை சரளாவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள் போன்ற திரைப்படங்களில் சற்று வயது அதிகமான கதாபாத்திரங்களே வழங்கப்பட்டன.
பின்னர் ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து முப்பாத்தா என்ற கதாபாத்திரத்தில் கவுண்டமணிக்கு இணையாக கோவை சரளா நடித்திருந்தது அவரை சின்ன மனோரமா என தமிழ் சினிமா வரவேற்க காரணமாக மாறியது. தொடர்ந்து கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கவுண்டமணி, கோவை சரளா செந்தில் இணை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதே காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு கோவை சரளாவுக்கு கிடைத்தது. சதி லீலாவதி திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக கோவை சரளா நடிக்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆச்சரியப்பட்டது. கோவை சரளாவின் கொங்கு மொழிக்காகவே இந்த திரைப்படத்தில் கமலஹாசனுக்கு கோவை சரளாவை ஜோடி ஆக்கினார் பாலு மகேந்திரா.
பின்னர் விவேக், வடிவேலு போன்றோருடனும் ஜோடி போட்டார்.
வடிவேல் நடிக்கும் திரைப்படங்களில் அவரை துவம்சம் செய்யும் மனைவியாக தவறாமல் இடம்பிடித்தார் கோவை சரளா.
இதன் பின்னர் லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி திரைப்படத்தில் கோவை சரளா ஏற்று நடித்த அம்மா கதாபாத்திரம் அவரை தெலுங்கு திரையுலகிலும் ரவுண்ட் கட்ட உதவியது.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களையும் தனது முத்திரையை பதிக்க முடியும் என அண்மையில் வெளியான செம்பி திரைப்படத்தில் தன்னை நிரூபித்து காட்டி இருந்தார் கோவை சரளா. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேல் திரைத் துறையில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா என ஏறத்தாழ 500 படங்களில் நடித்து விட்ட கோவை சரளா தமிழ் சினிமா கொண்டாடாத ஆச்சரியங்களில் ஒருவர்.