Home Blog Page 307

மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

 

பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் கட்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி ஆகியவற்றில் பொதுஜன பெரமுனவின் எவ்வாறு உதவ முடியும் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இன்றைய ராசிபலன் 06.03.2023

இன்றைய ராசிபலன் 06.03.2023

மேஷம் 

நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்

பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.பழைய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்கு தாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு.வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள்.சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கன்னி

விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் வரும் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்

பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியைபைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்

உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்‌. அந்தஸ்து உயரும் நாள்.

தனுசு

கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதிய நட்பால் உற்சாக மடைவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மீனம்

விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

 

அரியவன் – விமர்சனம்

பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் பிரச்சினைகளைக் கொண்ட படங்கள் சமீப காலங்களில் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. நிஜத்தில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதால், அது பற்றிய எச்சரிக்கை உணர்வையும், பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும்படியாகவும் சில படங்கள் வருகின்றன. அந்த விதத்தில் வந்துள்ள படம்தான் இந்த ‘அரியவன்’.

தனுஷ் நடித்த “யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம்” மற்றும் புதுமுகங்கள் நடித்த ‘மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என தயாரிப்பாளர் சொல்கிறார். ஆனால், இந்தப் படம் சம்பந்தப்பட்ட எந்த புரமோஷன்களிலும் இயக்குனர் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் இன்று வரை மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கும் படம் என்றே விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இஷான், ஒரு கபடி விளையாட்டு வீரர். அவருக்கு பிரனாலி கோக்ரே என்ற காதலி இருக்கிறார். பிரனாலியின் தோழி ஒருவரை அவரது காதலன் ஆபாச வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார். அது பற்றி தெரிய வந்ததும் அந்த காதலனையும், அவனது கும்பலையும் பற்றி விசாரிக்கிறார் இஷான். அவர்களிடமிருந்து மேலும் பல பெண்களின் வீடியோக்களைக் கைப்பற்றுகிறார். அந்த கும்பலின் பின்னணியில் தலைவனாக இருக்கும் டேனியல் பாலாஜி, இஷான் செய்தது பற்றித் தெரிய வர அவரை மிரட்டுகிறார். எதைப் பற்றியும் கவலைப்படாத இஷான், டேனியல் பாலாஜியை எதிர்த்து மற்ற பெண்களையும் காப்பாற்ற நினைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் அறிமுகக் கதாநாயகனாக இஷான் நடித்துள்ளார். ஆக்ஷனில் அசத்துபவர், ஆக்டிங்கிலும் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். எல்லா காட்சிகளிலும் ஒரே விதமான முகபாவத்தையே வெளிப்படுத்துகிறார். அவரது காதலியாக பிரனாலி கோக்ரே. காதலனுக்கு உதவியாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். பெண்களை வைத்து வீடியோ எடுத்து அதன் மூலம் கோடிகளை சம்பாதிக்கும் வில்லனாக டேனியல் பாலாஜி.

இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். அதற்குள்ளாகவே படத்தை சுருக்கமாக முடித்துள்ளார்கள். பெரிய அளவில் எந்தவிதமான திருப்புமுனைகளும் படத்தில் இல்லை. எப்படியும் ஹீரோ, பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை இன்னும் பரபரப்பாகச் சொல்லியிருக்கலாம். கிளைமாக்சில் ஹீரோ களத்தில் இறங்காமல், பாதிக்கப்பட்ட பெண்களை வைத்தே படத்தை முடித்திருப்பது மட்டும் சிறப்பு.

படத்தில் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்தான். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் ரசிக்கும்படியான படமாக வந்திருக்கலாம். படத்தை யார் இயக்கினாரோ அவர்தான் அதற்கு பொறுப்பு. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

அரியவன் – கொஞ்சம் சிறியவன்…

பல்லு படாம பாத்துக்க – விமர்சனம்

”த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து,’ போன்ற இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட, நாலாம்தரமான படங்களின் வரிசையில் இணைந்துள்ள மற்றொரு படம் இது.

இன்றைய இளம் ரசிகர்கள் இப்படிப்பட்ட படங்களையும் ரசிப்பார்கள் என தப்புக்கணக்கு போட்டு தப்புத்தப்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இரட்டை அர்த்த வசனங்கள் போதும், கதை எதுவும் தேவையில்லை என காட்டுக்குள் ஜாம்பிகள் என கம்பி கட்டி கதை என்ற ஒன்றை எழுதியிருக்கிறார் இயக்குனர் விஜய் வரதராஜ்.

குஞ்சிதண்ணி காடு என்ற காட்டுப்பகுதி ஒன்றில் ஜாம்பிகள் இருப்பதாகவும், அந்தப் பகுதியில் தற்கொலை அதிகம் நடப்பதாகவும் ஒரு கதை இருக்கிறது. அந்த இடத்திற்குத் தற்கொலை செய்து கொள்ள அட்டகத்தி தினேஷ், லிங்கா, சாய் தீனா, ஜகன் உள்ளிட்ட சிலர் தனித் தனியே செல்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திடீரென நண்பர்களாகிறார்கள்.

அந்தக் காட்டுக்குள் என்ன இருக்கிறது என பார்த்துவிடலாம் எனச் செல்கிறார்கள். ஜாம்பிகளிடம் சிக்கும் அவர்களை சஞ்சிதா ஷெட்டி காப்பாற்றுகிறார். ஆளுக்கு ஒரு பிளாஷ்பேக் சொல்லி நம்மை போரடிக்க, கடைசியாக சஞ்சிதா சொல்லும் பிளாஷ்பேக் மூலம் கதை கிளைமாக்ஸ் நோக்கி நகர்கிறது. அதில் ஹிட்லர் எல்லாம் வந்து நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை யார் வாயைத் திறந்து பேசினாலும், அதில் இரட்டை அர்த்த வசனம் ஒன்றாவது இருக்க வேண்டும் என யோசித்து வசனம் எழுதியிருக்கிறார் இயக்குனர். கடைசியில் ஹிட்லரையும் ஜாம்பி எனச் சொல்லி அவரையும் கிண்டலடித்து படத்தை முடித்திருக்கிறார்கள். எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றி ஒரு வழியாக முடிகிறது படம்.

ஓடிடியில் பார்க்கச் சொன்னால் கூட பத்து நிமிடத்தில் படத்தை மாற்றிவிடுவார்கள் ரசிகர்கள். அப்படி ஒரு படத்தை இரண்டு மணி நேரம் பொறுத்திருந்து பார்க்க தனி மன தைரியம் வேண்டும். நடித்திருக்கும் அனைவருமே அவரவர் இஷ்டத்திற்கு நடித்திருப்பதாகத்தான் தெரிகிறது. இறுக்கமான ஆடையுடன் மட்டுமே வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. எதையோ சொல்லி ஏமாற்றி அட்டகத்தி தினேஷை நடிக்க வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஜெகன் பேச்சில் மட்டுமல்ல, உடல் மொழியிலும் ‘ஒரு மாதிரி’ நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமா ஒரு அடி முன்னேறினால் இது போன்ற படங்கள் வந்து பத்து அடி பின்னுக்கு இழுத்துவிடும். இது போன்ற படங்கள் தமிழ் சினிமா மீது பல்லு படாம பாத்துக்க வேண்டியது ரசிகர்களின் பொறுப்பு.

பல்லு படாம பாத்துக்க – பசங்க கண்ணுல படாம பாத்துக்கணும்…

பஹிரா – விமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்நியன்’ படத்தையும், பாரதிராஜா இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தையும் கலந்து செய்தால் வருவதுதான் ‘பஹிரா’ கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே பெண்களால் காதலில் ஏமாந்து போனதாக சொல்லப்படும் சில யு டியுப் வீடியோக்களைக் காட்டி, காதலில் பெண்கள் மோசமானவர்கள் என பெண்களை மட்டம் தட்டும் விதத்தில் படத்தை ஆரம்பிக்கிறார்கள்.

போதாக்குறைக்கு படம் முழுவதும் பெண்கள் கெட்டவர்கள் என்று சித்தரிப்பதிலேயே இயக்குனர் கவனமாக இருந்திருக்கிறார். “பெண்களுக்கு ஒண்ணுன்னா வேறு எந்த பெண்ணும் வர மாட்டா, ஆனால், ஆண்களுக்கு ஒண்ணுன்னா இந்த பஹிரா” என வருவான் என வசனத்திலும் பெண்கள் மீதான தாக்குதல்தான் அதிகம். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற மட்டரகமான காதல் படத்தைக் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அதே மாதிரியான ஒரு படத்தைத்தான் கொடுத்திருக்கிறார்.

இது போன்ற கதைகளை நம்பி பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர் ரொம்பவே பாவம். இந்தப் படமெல்லாம் எப்படி ஓடும் என எதிர்பார்த்தார் என்பது அவருக்கே வெளிச்சம். நேற்று நாம் படத்தைப் பார்த்த போது 200 பேர் அமரக் கூடிய தியேட்டரில் வெறும் 20 பேர் மட்டுமே இருந்தனர். ஏற்கனவே, தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது. இப்படியெல்லாம் படமெடுத்தால் பயந்து போய் தியேட்டர் பக்கம் மக்கள் வரவே மாட்டார்கள்.

பிரபுதேவா விதவிதமான கெட்டப்புகளில், சில பல பெண்களை ‘டெடி பியர்’ பொம்மையை வைத்து கொலை செய்கிறார். அடுத்தடுத்த கொலைகளால் காவல் துறை திண்டாடுகிறது. பிரபுதேவா ஏன் இப்படி கொலைகளை செய்கிறார், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பிரபுதேவா விதவிதமான தோற்றங்களில் வருகிறார். பள்ளிகளில் நடக்கும் மாறுவேடப் போட்டிகளில் கூட இந்தக் காலத்தில் சிறப்பான மேக்கப் செய்கிறார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு அந்த அளவில் கூட பிரபுதேவாவிற்கு மேக்கப் செய்யவில்லை. ஏதோ கடமைக்கு படம் எடுத்தால் போதும் என இயக்குனர் எடுத்திருப்பார் போலிருக்கிறது. கடைசி சில காட்சிகளில் மட்டும் பிரபுதேவா நடிக்க முயற்சித்திருக்கிறார்.

படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால் என சில பல ஹீரோயின்கள். இவர்களில் அமைராவிற்கு மட்டும் ஐந்து நிமிடத்திற்கும் மேலான காட்சிகள். மற்றவர்களுக்கு அதைவிடக் குறைவான காட்சிகள். நாசர், சாய்குமார், ஸ்ரீகாந்த் ஆகியோரும் படத்தில் உண்டு.

80களிலேயே இந்த மாதிரியான ரிவஞ்ச் கதைகளை மூட்டை கட்டி, பரண் மீது தூக்கி போட்டுவிட்டார்கள் இயக்குனர்கள். டிவியில் அடுத்தடுத்து ‘அந்நியன், சிகப்பு ரோஜாக்கள்’ இரண்டு படத்தையும் இயக்குனர் பார்த்ததும் இரண்டையும் கலந்து இப்படி ஒரு படம் எடுக்க யோசனை வந்திருக்கும். இவர் இயக்கத்தில் அடுத்து விஷால், எஸ்ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ என்ற ஒரு படம் வரப் போகிறது. அதை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

பஹிரா – ரசிகர்கள் பாவம்ரா….

இன்றைய ராசிபலன் 05.03.2023

மேஷம்

எதிர்ப்புகள் அடங்கும்‌. பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

மிதுனம்

கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும் அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். விலைஉயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கடகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய, பொறுமை தேவைப்படும் நாள்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

 

கன்னி

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் வைத்து உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

துலாம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள்ஆவார்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த
உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு

சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களைவிமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள்வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

மகரம்

தன்னம்பிக்கையுடன் நற்காரியம் மற்றும் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கும்பம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சிலநுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

மீனம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

 

பிரஜைகளின் தகவல் அறியும் உரிமை தொடர்பான தீர்ப்பை வரவேற்றுள்ள TISL

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் தொடர்பாக கோரப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை வலியுறுத்தும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வரவேற்கிறது.

 

சாமர சம்பத் எதிர் இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விவகாரத்தில், 2010ம் ஆண்டு தொடக்கம் 2018ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பாராளுமன்றம் உடனடியாக வெளியிட வேண்டும் என 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு (RTI) உத்தரவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தினை கருத்திற்கொண்டு கோரப்பட்ட தகவல்கள், அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் பொதுநலனை அடிப்படையாக கொண்டவை எனவும் ஆணைக்குழு அறிவித்தது.

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிப்பது 1975ம் ஆண்டின் சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் ஓர் சட்டப்பூர்வமான கடமை என்பதும் இங்கு கவனிக்கப்பட்டது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் அவ்வாறான சட்டப்பூர்வ கடமை தொடர்பிலான தகவல்களை கோரும் கோரிக்கைக்கு கட்டாயம் பதிலளிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு அறிவித்தது.

 

சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்டமானது 2016ம் ஆண்டின் 12ம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை விட மிஞ்சியது அல்லது மேம்பட்டது எனும் காரணங்கள் உள்ளடங்கலாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாராளுமன்றமானது 15 காரணங்களுக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 2023 பெப்ரவரி மாதம் 28ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றமானது RTI ஆணைக்குழுவின் உத்தரவினை உறுதி செய்தது.

 

இங்கு குறிப்பிடத்தக்க ஓர் விடயம் யாதெனில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள்/ஏற்பாடுகள் சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்ட விதிகள்/ஏற்பாடுகளை விட மேலோங்கியுள்ளது என மேல்முறையீட்டு நீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி கருதுகிறது.

 

ஊழலுக்கு எதிராகப் போராடும் நோக்கத்திற்காகவே இலங்கையில் சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பனவும் இயற்றப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் எடுத்துக்காட்டுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டமானது இலங்கையின் அரசியலமைப்பு 14A உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை அணுகுவதற்கான உரிமையினை அடையாளப்படுத்துவதனால் ஊழலை எதிர்ப்பதற்கும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதன் மூலமும் பொதுவாழ்வில் முழுமையாக பங்கேற்க நாட்டின் பிரஜைகளுக்கு அவகாசமாளிக்கிறது.

 

மேலும், சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்டமும் ஊழலை எதிர்த்துப் போராடுவதை நோக்காக கொண்டுள்ளது. இச்சட்டமானது பொருத்தமான நபர்களை அவ்வப்போது தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்துகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் எல்லா நேரங்களிலும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஏனையோர் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகளாக திகழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

 

எனவே சம்பந்தப்பட்ட அதிகார சபைகள் சட்டத்தின்படி செயல்படுகின்றனவா என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தங்களது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை பெற்றுக்கொள்வது தான் அந்தத் தகவலைப் பெறுவதற்கான ஒரே வழியாகும். பொது அதிகார சபைகள் தகவல்களை வழங்க மறுக்கும் முன், கோரப்படுகின்ற தகவலின் “பொது நலனின்” முக்கியத்துவம் தொடர்பில் கருத்தில் கொள்ளுமாறு குறித்த தீர்ப்பு மேலும் வலியுறுத்துகிறது.

 

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களின் வெளிப்படைத்தன்மை தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை TISL நிறுவனம் வரவேற்கிறது.

யாழ். மாநகர சபைக்கு புதிய மேயரை தெரிவு செய்ய தீர்மானம்

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் புதிய மேயரை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் கையொப்பத்துடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ். மாநகர சபைக்கான புதிய மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம், எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த ஜனவரி 21 ஆம் திகதி யாழ். மாநகர சபை மேயராக முன்னாள் மேயர் இம்மானுவல் ஆர்னோல்ட் கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது

தேர்தலை நடத்த கோரி யாழில் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10.30 மணியளவில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து, பொருட்களின் விலையை குறை, உள்ளூராட்சி தேர்தலை உடன் நிறுத்து, வடபகுதி கடல் வளத்தை இந்தியாவிற்கு விற்காதே, உழைக்கும் மக்களை சுரண்டாதே என பல்வேறு கோசங்களை போராட்டத்தின் போது எழுப்பினர்.

அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கான எச்சரிக்கை!

உலக முதியோர் சனத்தொகையில் 1.9 பில்லியனுக்கும் அதிகமானோர் அதிக உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அவர்களில் 650 மில்லியன் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்தார்.

நாளை 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச உடல் பருமன் தினத்தை முன்னிட்டுC நேற்று (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…

உலக சனத்தொகையில் 39% மானோர் இவ்வாறு அதிக உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையிலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காணப்படுகின்றனர். 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொற்றா நோய்களுக்கான காரணிகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 22% ஆண்களும் 34% பெண்களும் அதிக உடல் எடை கொணடவர்களாக காணப்பட்டனர். பின்னர் 2021 ஆம் ஆண்டில் அதே கணக்கெடுப்பின்படி, 31% ஆண்களும் 47.7% பெண்களும் அதிக எடை கொண்டவர்களாக பதிவாகியுள்ளனர்.

மேலும், சிறுவர்கள் மத்தியிலும் பொதுவாக இந்த அதிக உடல் பருமன் பிரச்சினை காணப்படுகிறது. இது அவர்களுக்கு மிகவும் பாதகமானதொரு நிலையாகும். எனவே இது குறித்து அறிந்திருப்பது அவசியம். இதனூடாக உயர் குருதி அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் போன்ற தொற்றா நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

அதன்படி, தனது வாழ்க்கை முறையை முறைப்படுத்துதல், மருந்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (BMI மதிப்பு) 18.5 முதல் 25 வரை பராமரித்தல் போன்ற முறைகளைக் கடைப்பிடிப்பதன் ஊடாக இந்த உடல் பருமனைக் கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)