சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

Date:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை(17-ந்தேதி) தொடங்குகிறது.

இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படுகிறது.

தொடர்ந்து சன்னிதானத்தில் புதிய மேல் சாந்திகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டிமேளதாளம் முழங்க 18-ம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்படுகிறார்கள்.

பின்பு இரு மேல்சாந்திகளையும், படியிறங்கும் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி 18-ம் படிவழியாக சன்னிதானத்துக்கு அழைத்து வருகிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் கூறி பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் இருவரையும் தந்திரி கலசாபிஷேகம் நடத்தி அபிஷேகம் செய்கிறார். அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்படைக்கப்படும்.

நாளை(17-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமையேற்று நடத்துவார். அன்றைய தினம் முதல் தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள், மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதன்பிறகு மாலை 4 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

பக்தர்கள் வரும் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜைக்காக நாளை(17-ந்தேதி) முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை முதல் டிசம்பர் 27-ந்தேதி வரையிலான 41 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்திலும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும். பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவுபெறும்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தேவசம்போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள மலைப்பாதையில் ஏராளமான இடங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“எலெக்ஷன்” படத்தின் 2வது சிங்கிள் வெளியானது

'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார்...

குபேரா படத்தில் நாகர்ஜூனா ஃபர்ஸ்ட் லுக் – மாஸ் வீடியோ வெளியீடு

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா....

வெற்றிக்கு ‘தல’ தான் காரணம் – சென்னையை கிண்டல் செய்த பஞ்சாப்!

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

4 சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன்? டுவிஸ்ட் வைத்த ரோகித் சர்மா

டி20 உலகக் கோப்பை ஜூன் 1-ந் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய...