தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக புகையிரத பாதையான WHOOSH இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இன்று ஜகார்த்தாவிலிருந்து பாண்டுங் நகருக்கான குறித்த புகையிரத பாதையை திறந்துவைத்தார்
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்தாவிலிருந்து பாண்டுங் நகரத்துக்கான குறித்த புகையிரத பாதை 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் Belt and Road (பெல்ட் அண்ட் ரோட்) திட்டத்தில் ஒரு பகுதியான குறித்த அதிவேக புகையிரத சேவையானது, 142.3 கிலோமீட்டர் தூரமானது. மணிக்கு சுமார் 217 மைல்கள் வேகத்தில் செல்லக்கூடியதுடன், சுமார் 3 மணிநேர பயண தூரத்தை ஒரு மணி நேரத்தில் செல்லக்கூடியதாகும்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டம் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இது அந்நாட்டிற்கு மிகவும் திறமையான மற்றும் விரைவான போக்குவரத்து தீர்வை வழங்குகிறது.
இந்த அதிவேக ரயில் பாதை, அதிகாரப்பூர்வமாக WHOOSH (“நேர சேமிப்பு, உகந்த செயல்பாடு, நம்பகமான அமைப்பு” என்பதன் சுருக்கம்) என்று இந்தோனேசிய மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. இது மின்சாரத்தில் இயங்குவதென்பது குறிப்பிடத்தக்கது.