மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
அவர்களில் ஒருவர் பழைய மால்டா நகரிலும், மற்ற 6 பேர் கலியாசக் பகுதியிலும் உயிரிழந்தனர். அவர்கள் கிருஷ்னோ சவுத்ரி (வயது 65), உம்மி குல்சும் (வயது 6), தேபோஸ்ரீ மண்டல் (வயது 27), சோமித் மண்டல் (வயது 10), நஜ்ருல் எஸ்.கே. (வயது 32), ரோபிஜன் பீபீ (வயது 54) மற்றும் ஈசா சர்க்கார் (வயது 8) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுதவிர, 9 கால்நடைகள் மின்னல் தாக்கி உயிரிழந்து உள்ளன. மால்டா நகரில் பங்கிதோலா பகுதியருகே உயர்நிலை பள்ளியொன்றில் பள்ளி நேரத்தின்போது மின்னால் தாக்கியதில், 12 மாணவ மாணவியர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் பங்கிதோலா கிராமப்புற மருத்துவமனை மற்றும் மால்டா மருத்துவ கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என மால்டா மாவட்ட மாஜிஸ்திரேட் நிதின் சிங்கானியா கூறியுள்ளார்.