இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற வெற்றியை ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் தங்கள் வாழ்வை இழந்து மக்களுக்கு சமர்ப்பிப்பதாக ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்தது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 284 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 215 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு இது மிகப்பெரிய தோல்வியாகும். அதே சமயம் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது வரலாற்று வெற்றி ஆகும்.
போட்டிக்கு பின்னர் பேசிய ரஷீத் கான், ‘இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. இந்த ஆட்டம் எங்களுக்கு எந்த நாளிலும், எந்த அணிக்கு எதிராகவும் வெற்றி பெற முடியம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. அதேபோல் உலகக்கோப்பையின் எஞ்சிய போட்டிகளுக்கு இது உத்வேகமாக அமையும்’ என்றார்.
அத்துடன், ‘இந்த வெற்றியை நிலநடுக்கத்தில் தங்கள் வாழ்வை இழந்த 3,000 மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இது ஆப்கான் மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.கடினமான தருணங்களை அவர்கள் கொஞ்சம் மறக்க இது வழிவகுக்கும்’ என உருக்கத்துடன் கூறினார்.