ஐபிஎல் 2024 தொடரின் 67வது லீக் போட்டியில் மும்பையை 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ நிக்கோலஸ் பூரான் 75, கேப்டன் ராகுல் 55 ரன்கள் எடுத்த உதவியுடன் 215 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய மும்பை 20 ஓவரில் 196/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
அந்த அணிக்கு ரோகித் சர்மா 68, நமன் திர் 62* ரன்கள் எடுத்துப் போராடியும் சூரியகுமார், பாண்டியா உள்ளிட்ட இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் 10வது தோல்வியை பதிவு செய்த மும்பை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. மறுபுறம் லக்னோ அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
இதெல்லாம் தேவையா:
முன்னதாக இந்தப் போட்டியில் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோனதால் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் ஆரம்பத்தில் அசத்திய அவர் முதல் 2 ஓவரில் 10 ரன்கள் மட்டும் கொடுத்து நன்றாகவே பந்து வீசினார். அப்போது அவர் வீசிய ஒரு பந்தை மார்கஸ் ஸ்டோய்னிஸ் எதிர்கொண்டு பிட்ச்சிலேயே அடித்தார்.
ஆனால் அதை கையிலெடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் தேவையின்றி மார்கஸ் ஸ்டோய்னிஸ் மேல் எறிவது போல் மிகுந்த கோபத்துடன் ரியாக்சன் கொடுத்தார். அதனால் ஆச்சரியமடைந்த ஸ்டோய்னிஸ் “என்ன தம்பி ஒன்றுமில்லாததற்கு இப்படி செய்கிறீர்கள்” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார். அதே போல இன்னும் ஐபிஎல் தொடரில் கூட எதையும் சாதிக்காத நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சீனியர் வீரரிடம் இப்படி முறைக்கலாமா? என்று ரசிகர்களும் அர்ஜுன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மீண்டும் அர்ஜுன் டெண்டுல்கர் 15வது ஓவரை வீசினார். இருப்பினும் அப்போது கருணை காட்டாத நிக்கோலஸ் பூரான் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அப்போது தசை பிடிப்பு காயத்தை சந்தித்த அர்ஜுன் களத்தை விட்டு வெளியேறினார். அதனால் நமன் திர் வீசிய எஞ்சிய 4 பந்துகளில் பூரான் மற்றும் ராகுல் ஆகியோர் சேர்ந்து 6, 6, 1, 6 என மொத்தமாக 15வது ஓவரில் 29 ரன்களை விளாசினர்.
மொத்தத்தில் இந்த வருடம் 13 போட்டிகள் பெஞ்சில் அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் இப்போட்டியில் முழுமையாக விளையாட முடியாத அளவுக்கு ஃபிட்டாக இல்லாமல் மூச்சு வாங்கி பாதியிலேயே வெளியேறினார். அதனால் இனிமேலாவது இது போல் தேவையின்றி சீனியர்களிடம் முறைக்காமல் விளையாடும் வழியை பாருங்கள் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக உங்கள் தந்தை சச்சினை போல் அமைதியாக இருந்து செயலில் திறமையை காட்டுங்கள் என்று அர்ஜுன் டெண்டுல்கர் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.