ஒரே நேரத்தில் பயணியர் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையிலான, ‘டபுள் டெக்கர்’ ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலாவது சில ரயில்களை சோதனை ஓட்டம் பார்க்க ரயில்வே தயாராகி வருவதாக, டில்லியில் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த டபுள் டெக்கர் கார்கோ ரயிலின் முதல் அடுக்கில், 6 டன் வரை எடையுள்ள சரக்குகள் இடம்பெற அனுமதிக்கப்படும். மேல் அடுக்கில், ஒரு பெட்டிக்கு 46 பயணியர் அமரும் வகையில் வசதி இருக்கும். நாட்டிலேயே முதல்முறையாக, பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு ஒரே ரயிலாக இது இருக்கும். இதன் வாயிலாக, சரக்கு போக்குவரத்துக்கென தனி ரயில்களின் தேவை குறைவதுடன், பயணியரும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்ல கூடுதல் சேவை கிடைக்கும் என ரயில்வே கருதுகிறது.
டபுள் டெக்கர் கார்கோ ரயில்கள் தயாரிப்பு வேகம் பெற்று வரும் நிலையில், விரைவில் சில ரயில்களை சோதனை ஓட்டம் நடத்திப் பார்க்க ரயில்வே தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘வந்தே கார்கோ’ என்ற பெயரில், பிரத்யேகமாக சரக்கு போக்குவரத்துக்கென, அதிக சரக்குகளை சுமந்து, அதிவேகமாக செல்லக்கூடிய ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட உள்ளன. இந்த சரக்கு ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்லக்கூடியவை என்பதால், சரக்கு போக்குவரத்து விரைவாக நடைபெறும்.




