கம்பளை நகரில் இருந்து அம்புலாவ பகுதிக்குச் செல்வதற்காக இரு நபர்கள் முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது அம்புலாவ கல்பங்கலாவ என்ற பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தை நெரித்துப் பின்பு அவரை அடித்துக் காட்டுப் பகுதியில் தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், அம்புலாவ பகுதியில் இருந்து எம்மாத்தகம பகுதியை நோக்கிச் சென்ற குறித்த முச்சக்கரவண்டி, எம்மாத்தகம பகுதியிலிருந்து அம்புலாவ பகுதிக்கு வந்த மகிழுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால், முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற இரு சந்தேக நபர்களும் அந்தப் பகுதியில் உள்ள காட்டுக்குள் பாய்ந்து தலைமறைவாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டு இரு சந்தேக நபர்களையும் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இரு சந்தேக நபர்களும் 23 மற்றும் 25 வயதுக்கு உள்பட்ட, கம்பளை எத்கால்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




