ஜனாதிபதி இல்லம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொய்யான கருத்துகளை முன்வைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இதனைத் தெரிவித்த அவர், அந்த வழக்கின் தீர்ப்பில் அமைச்சர் கூறுவதை போல எந்த விடயமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரான உண்மையான வழக்கு தீர்ப்பின் பிரதி என்னிடம் உள்ளது.
மைத்ரிபால சிறிசேன, ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஓய்வின் பின்னரான வரப்பிரசாதங்கள் தொடர்பில் தீர்மானித்தமை தவறு என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஓய்வுபெறுவதற்கு முன்னதாக அவருக்கான இல்லத்தை அவர் தெரிவு செய்யவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் ராஜபக்ஷக்களை இலக்குவைத்து சிறையில் தள்ளினாலும், சட்டத்துக்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு இல்லமொன்றை வழங்கியது.
கோடி கணக்கான அரசாங்க நிதியை பயன்படுத்தி அந்த இல்லத்தை மஹிந்த திருத்தியமைத்தார் என கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.
அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது, அவர் ஆட்சியில் இருக்கவில்லை. அரகலய போராட்ட காலப்பகுதியில், மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட விஜேராம இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன்பின்னரும் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த இல்லத்தை மஹிந்த ராஜபக்ஷ சட்டரீதியாக சொந்தமாக்கவில்லை எனவும் அதற்காக மேற்கொள்ளப்படும் செலவுகளாலோ அங்கு ஏற்படுத்தப்படும் வசதிகளாலும் அவர் எதிர்காலங்களில் பயனடையபோவதில்லை எனவும் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு தேவையுடையவர்களுக்கான பாதுகாப்பை குறைத்து, தேவையற்றவர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் தொடர்பான குழுவின் அறிக்கையை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.




