கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானைகளை வன்முறையில் ஈடுபடச் செய்வதற்காக சிலர் கஞ்சா போதைப்பொருள் கலந்த உணவை அவற்றுக்கு வழங்குவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானைகளால் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் யூடியூப் சமூக ஊடகத்தளத்தை நடத்தும் சிலர் காட்டு யானைகளை வன்முறைக்கு உள்ளாக்கும் வகையில் பூசணிக்காய்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் கஞ்சா போதைப்பொருள் கலந்து வழங்குவதாக எமது செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவற்றை உட்கொண்டதன் பின்னர் காட்டு யானைகள் வன்முறையில் ஈடுபடுவதாகவும், வாகனங்களைத் தாக்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், காட்டு யானைகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் உதவியற்ற நிலையில் ஓடும் காணொளிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் மோசடிகளும் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, புத்தல, மொனராகலை பகுதிகளில் உள்ள யூடியூப் சமூக ஊடகத்தளத்தை நடத்தும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கு முயற்சித்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




