காலி – ஹினிதும பகுதியில் விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
தொலைபேசி தரவுகளுக்கு அமைய, குறித்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் அம்பலங்கொடை, படபொல பகுதியைச் சேர்ந்த நெவில் என்பவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் இஸ்ரேலுக்குப் பயணிப்பதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அதற்காக இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றுமொரு நபரான விடுதியின் உரிமையாளருக்குப் பணம் வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய குறித்த நபர் விடுதியின் உரிமையாளருக்கு 12 லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ளார்.
எனினும் குறித்த தொகையில் 2 லட்சம் ரூபாய் பணம் மாத்திரமே விடுதியின் உரிமையாளரால் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தவிடயம் தொடர்பில் குறித்த இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன் இது குறித்து கலந்துரையாடுவதற்காக இடம்பெற்ற மது விருந்தின் போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை முன்னதாக கண்டறியப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.




