நாடு முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையால், பல பகுதிகளில் மக்கள் தற்போது குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
அதற்கமைய, இரண்டாயிரத்து 278 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் தாங்கி ஊர்திகளைப் பயன்படுத்தி மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வறண்ட காலநிலை காரணமாகக் காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானம் செலுத்தும் வகையில், நேற்று (24) முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை ‘தீப்பரல் கட்டுப்பாட்டு வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தீ அனர்த்தங்கள் ஏற்பட்டவுடன் அவற்றை அணைப்பது கடினம் என்பதையும், அத்தகைய அனர்த்தங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதத்தை மீட்டெடுக்க முடியாது என்பதையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என வனவள பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, இந்த நிலைமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தீப்பரவல் கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




