கரடியனாறு வைத்தியசாலையிலிருந்து 22 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்ற மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 22 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
31 மாணவர்களுக்கு நோய் நிலைமை பதிவான நிலையில், சிற்றுண்டிச்சாலையில் உணவை உட்கொண்ட 53 மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகப் பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 31 பேர் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 22 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகக் குறித்த சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரைக் காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரிசோதனைகளுக்காக மாணவர்கள் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகளை பொது சுகாதார பரிசோதகர்கள் பெற்றுள்ளதாக கரடியனாறு காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.




