மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். அவன், தங்களது நாட்டை சேர்ந்தவன் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானில் பிறந்து கனடாவில் வசித்த தஹாவூர் ராணா என்ற பயங்கரவாதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான்.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, தஹாவூர் ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். அவனை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பாதுகாப்புடன் டில்லி அழைத்து வந்தனர்.
அவனை, டில்லி திஹார் சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவனிடம் நடக்கும் விசாரணையில் மும்பை தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷப்கத் அலி கான் கூறியதாவது: தஹாவூர் ராணா காலாவதியான குடியுரிமை விவரங்களைப் புதுப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் குடியுரிமையை புதுப்பிக்கவில்லை. அவர் கனடா நாட்டவர் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.




