நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.
அதற்கான காசோலையை, இலங்கைக்கான மியான்மர் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வழங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்வு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது நிலநடுக்கத்தின் பின்னர் மியான்மரின் தற்போதைய நிலைமை குறித்தும் ஜனாதிபதியின் செயலாளருக்கு தூதுவர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிதி உதவி வழங்கியதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கைக்கான மியான்மர் தூதுவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் மியான்மருக்கும் இடையிலான நீண்டகால மத மற்றும் கலாசார நட்புறவு இதன் காரணமாக மேலும் வலுவடையும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோன்று நெருக்கடியான நேரத்தில் நிவாரணக் குழு மற்றும் சுகாதார பணிக்குழுவை அனுப்பி வைத்தமைக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் சிரேஷ் மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, மியான்மர் தூதரக அதிகாரிகளான Winh Wint Khaus Tun, Lei Yi Win உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.




