அமெரிக்காவில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பாலஸ்தீன சிறுவனை, 26 முறை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த முதியவருக்கு, 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்சைச் சேர்ந்தவர் ஜோசப் சூபா, 73. கடந்த 2023ல், இவருக்கு சொந்தமான வீட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹனான் ஷாஹீன் என்ற பெண்ணும், அவரது 6 வயது மகன் வாடி அல்பாயூமியும் வசித்து வந்தனர்.
அதே ஆண்டின் அக்டோபரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் ராணுவம், காசாவில் பதுங்கியிருந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் மீது தாக்குதல் தொடுத்தது.
இச்சம்பவத்தால் முஸ்லிம்கள் மீது ஜோசப் சூபாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தன் வீட்டில் குடியிருந்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகனை கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து, கத்தியை எடுத்துச் சென்று அவர்கள் இருவரையும் குத்தினார்.
முஸ்லிம்கள் மீதான வெறுப்பால், 6 வயது சிறுவனை 26 முறை கத்தியால் ஜோசப் குத்தினார். இதைத் தடுக்கச் சென்ற ஹனானையும் கத்தியால் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாலஸ்தீன சிறுவனை கொடூரமாக கொலை செய்த ஜோசப் சூபாவை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், ஜோசப் சூபாவிற்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.




