அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்ட தீர்மானித்தது.
அவுஸ்திரேலிய அணிக்கு வார்னர், மிட்சல் மார்ஷ் ஜோடி அபார தொடக்கம் தந்தது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இருவரும் அரை சதம் விளாசினர். இவர்களை பிரிக்க முடியாமல் பவுலர்கள்
திணறினர்.
ஒருவழியாக, பிரசித் கிருஷ்ணா ‘வேகத்தில்’ வார்னர் (56) ஆட்டமிழந்தார். மிட்சல் மார்ஷ் 96 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக செயற்பட்ட ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்தார். இவர் சிராஜ் பந்துவீச்சில் 74 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
தன் பங்கிற்கு லபுசேன் (72) அரை சதம் விளாசினார். கேரி (11), மேக்ஸ்வெல் (5) ஏமாற்ற அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 352 ஓட்டங்கள் எடுத்தது. கம்மின்ஸ் (19), ஸ்டார்க் (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியின் பும்ரா 3, குல்தீப் 2 விக்கெட் கைப்பற்றினர்.