சீன படையெடுப்பை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு பயிற்சி..!

Date:

கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி சுயாட்சி நாடான தைவானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது முதல் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. தைவானை சுற்றி வளைக்கும் வகையில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. சீன போர் விமானங்கள் அடிக்கடி தைவான் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்து வருகின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் ஜப்பானும் தைவான் கடல் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

தைவான் கடல் எல்லையில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது. இதனால் தைவான் நாட்டில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போர் குறித்த செய்திகள் வெளியாகி, போரினால் ஏற்படும் பேராபத்தை உலகிற்கு உணர்த்தின. இதையடுத்து ஒருவேளை சீனா தைவான் மீது போர் தொடுத்தால் பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது, ஆயுதங்கள் இல்லாமல் எதிரி நாட்டு படைகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டது தைவான் அரசு.

இதற்காக நாடு முழுவதும் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. பொதுமக்களும் மிகவும் ஆர்வமாக இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். போர் நடைபெற வாய்ப்புள்ளதால் இது போன்ற பயிற்சிகள் அவசியம் என பொதுமக்களே கூறுகிறார்கள். பயிற்சியில் கலந்து கொள்ளும் பெற்றோர் தங்கள் குழந்தைகளையும் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்து வருகிறார்கள். போர் தொடங்கி விட்டால் உடனடியாக எப்படி இடத்தை காலி செய்வது, என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்வது, அருகில் உள்ள பாதுகாப்பான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது உள்ளிட்ட டிப்ஸ்களை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

தைவானைச் சுற்றி ஆயிரக்கணக்கான கப்பல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சீனா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதையெல்லாம் கூறி பொதுமக்களை பீதியடைய வைக்க தைவான் அரசு விரும்பவில்லை. முதலில் பொதுமக்களுக்கு உளவியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் எனக் கருதுகிறது தைவான் அரசு. அதனால் தான் இது போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறது. பயிற்சியின் ஒரு கட்டமாக ஒருவேளை போர் ஏற்பட்டு காயமடைந்தால் எப்படி மருத்துவ உதவிகளை செய்து கொள்வது என்பது குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.

உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளின் புகைப்படங்களை காட்டி பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்கள் பயிற்சி அதிகாரிகள். தன்னாட்சி பெற்ற நாடாக திகழும் தைவானை தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தின் ஒரு பகுதி என சீனா கூறி வருவதால் இது போன்ற பதற்றமான நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....